பணமதிப்பிழப்பு முடிவு, ஜிஎஸ்டி வரி அமல் ஆகியவற்றின் தாக்கத்தை, குஜராத் தேர்தல் முடிவில் பாஜக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வியாபாரிகள் சங்க மாநாட்டில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
பணமதிப்பிழப்பு முடிவு, ஜிஎஸ்டி வரி அமல் ஆகியவை, வியாபாரிகளையும் ஒட்டுமொத்த வணிகத்தையும் பாதித்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலை அழிந்து விட்டது. பணமதிப்பிழப்பு முடிவால், வணிகம் முடங்கி விட்டது. இதனால் நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் அனைத்தும், வங்கிகளுக்குத் திரும்பி விட்டது.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், இதன் தாக்கத்தை பாஜக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், பாஜகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்பதென்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சிறிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பாஜகவுக்கு போதிய வெற்றி கிடைக்கவில்லை. பாஜகவின் வளர்ச்சி குறையத் தொடங்கியுள்ளது.
இதற்கு அக்கட்சியின் விவசாய எதிர்ப்பு மற்றும் வியாபாரிகள் எதிர்ப்புக் கொள்கைகளே காரணம். இதேபோல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சரிவை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. தற்போதைய அரசின் ஆட்சியின்கீழ், வியாபாரிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை. வியாபாரிகளின் நலன்களைக் காக்க சமாஜவாதி கட்சி போராட்டம் நடத்தத் தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியின்கீழ் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துவிட்டது. மதுரா, ஃபைசாபாத், சீதாபூர் ஆகிய இடங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என்றார் அவர்.
சமாஜவாதி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் பேசுகையில், "மத்திய மற்றும் உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் காரணமாக, நமது நாட்டை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன; பாஜக அரசு அகன்ற பிறகு, இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வருவோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக அரசு நீக்கப்பட்டால்தான், ராமராஜ்ஜீயம் சாத்தியமாகும்' என்றார்.