குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரைவத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, வரும் வியாழக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம், செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிகிறது. இந்நிலையில், ஆமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொள்வதற்கு பிரசாரம் மேற்கொள்வதற்கு பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் பிரசாரம் மேற்கொள்வதற்கு ஆமதாபாத் காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.
இதுதொடர்பாக, போக்குவரத்து காவல் ஆணையர் முலியானா, திங்கள்கிழமை கூறியதாவது: பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் பிரசாரம் செய்வதற்கு திட்டமிட்டுள்ள இடங்கள், மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் குறுகலான சாலைகளைக் கொண்ட பகுதிகளாகும். அங்கு தலைவர்கள் சென்றால், போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்படும். மேலும், அங்கு மத ரீதியில் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதால், பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றார் அவர்.
அதையடுத்து, ஆமதாபாதில், காங்கிரஸ், பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடல் விமானத்தில் மோடி பயணம்: இதனிடையே, ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து கடல் விமானம் மூலமாக, ஆம்பாஜி கோயிலுக்குச் செல்வதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் மோடி பேசியதாவது:
இந்திய வரலாற்றில் முதல் முறையாக, சபர்மதி ஆற்றில் கடல் விமானம் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவுள்ளது. அந்த விமானத்தில் பயணத்தில் செய்து, தரோய் அணையில் தரையிறங்கி, அங்கிருந்து அம்பாஜி கோயிலுக்குச் செல்ல இருக்கிறேன். எல்லா இடங்களிலும் விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதால், நீர் பரப்பில் இருந்து மேலெழும் கடல் விமானங்களை இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என்றார் அவர்.