சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு தில்லி பெருநகர நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
குஜராத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி, சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அன்னியச் செலாவணி (ஹவாலா) முறைகேட்டிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி கைது செய்தனர்.
இதனிடையே, ஜாமீன் கோரி குரேஷி தரப்பில் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டனர்.
கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குரேஷியை வெளியே விட்டால் சாட்சியங்களைக் கலைத்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிவிட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்தக் கூற்றை மறுத்து வாதிட்ட குரேஷி தரப்பு வழக்குரைஞர்கள், 'இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், மனுதாரர் (குரேஷி) சிறையிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றனர்.
இதையடுத்து, ஜாமீன் மனு மீதான உத்தரவை கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிபதி அருண் பரத்வாஜ் ஒத்திவைத்தார். இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது ரூ.2 லட்சம் பிணைத் தொகை செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல குரேஷிக்கு நீதிபதி அனுமதியளித்தார்.