மக்களிடம் மதரீதியான உணர்வுகளைத் தூண்டி விடும் நடவடிக்கைகளில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஈடுபட்டு வருகின்றன என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துவது தேசத்தின் நலனையே சீர்குலைத்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய தேசம் எந்த ஒரு மதத்துக்கும் சொந்தமானது கிடையாது. பூக்கள் ஒரே தோட்டத்தில் மலர்ந்தாலும் வெவ்வேறு நிறங்களில் இருப்பதைப் போல, ஒரு நாட்டில் உள்ள மக்களுக்கும் மாறுபட்ட நம்பிக்கைகளும், கருத்துகளும் உண்டு. அவற்றுக்கு மதிப்பளிப்பதுடன் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை வழங்குவதே மதச்சார்பற்ற தேசமாகக் கருதப்படும்.
அந்த அடிப்படையில் இயங்கி வரும் இந்த நாட்டினை சில அமைப்புகளும், கட்சிகளும், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக சீர்குலைக்க முயலுகின்றன. குஜராத் தேர்தலில் இதைக் கண்கூடாகக் காண முடிகிறது. மக்களிடையே மதரீதியான உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெற பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயலுகின்றன.
இத்தகைய போக்கு நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தவிர்க்க வேண்டும். மகாத்மா காந்தியின் தேசத்தை மதத்தை முன்னிறுத்தி ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது.
பிரமதர் மோடி, அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டியவர். குறிப்பிட்ட மதத்துக்கும், மாநிலத்துக்கும் சாதகமாக அவர் செயல்படமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் ஃபரூக் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.