மக்களவைக்கு முன்கூட்டியே, அதாவது 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாத காலத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தெலங்கானா மாநில பாஜக மூத்த தலைவரான கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களவைக்கு 2019ஆம் ஆண்டுக்குப் பதிலாக, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திலேயே தேர்தல் நடத்தப்படலாம் என நினைக்கிறேன். இதை கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற வகையில் தெரிவிக்கவில்லை. இது கட்சியின் நிலைப்பாடும் கிடையாது.
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் வரும் கூட்டத் தொடரிலோ, அதற்கடுத்த கூட்டத் தொடரிலோ நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டே, இந்த கருத்தை தெரிவிக்கிறேன். அப்போது 2018ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டுகளில் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்கள், மக்களவைக்கு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறேன். பிற மாநிலங்களுக்கு (2019ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள்) 2 ஆண்டுகள் கழித்து தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இப்படிச் செய்வதன் மூலம், மக்களவைக்கு தேர்தல் நடக்கும்போது அதனுடன் சேர்த்து, அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். அதாவது ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். குஜராத் தேர்தலுக்குப் பிறகு, இதை முக்கிய விவகாரமாக கருதி பிரதமர் மோடி செயல்படுவார் என நினைக்கிறேன் என்று கிருஷ்ண சாகர் ராவ்
தெரிவித்தார்.