நாட்டில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்குமாறு பரிந்துரைக்க சட்ட ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில், நமது நாட்டில் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகிய விஷயங்களை சட்டபூர்வமாக்க சாத்தியக் கூறு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி சட்ட ஆணையத்துக்கு உச்ச நீசிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சட்ட ஆணையம் தயாரித்துள்ள அறிக்கையில், "விளையாட்டுகளை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை முறைப்படுத்தி, சட்ட அங்கீகாரம் அளிப்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும்; இதன் மூலம் கருப்புப் பணம் உருவாவதையும் தடுக்க முடியும். இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு முறைப்படி உரிமம் அளித்து, அவர்களது ஆதார், பான் உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்பன போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.