தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை காலை 6 முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது பிற்போக்கான நடவடிக்கை என்று சமூக நல அமைப்பான இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் செயல் இயக்குநர் பூனம் முட்ரேஜா கூறியதாவது: குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் சுகாதாரம், பாலியல் நோய்த் தடுப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் ஒருபுறம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் செய்தி ஒளிபரப்புத் துறை முக்கிய நேரத்தில் ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது நமது நாட்டில் பல ஆண்டுகளாக மேம்பட்டு வந்த பாலியல் நோய்கள் தடுப்பு தொடர்பான முன்னேற்றத்தைப் தடுத்த நிறுத்தும் செயலாகும்.
இப்போதும் 5.6 சதவீத ஆண்கள் மட்டும் ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டில் மட்டுமின்றி பாலியல் நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் ஆணுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சியில் இருந்து மட்டும் குழந்தைகள் தகவல்களைத் தெரிந்து கொள்வது இல்லை. இணையத்தின் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். எனவே, குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு ஆணுறை விளம்பரங்களுக்கு தொலைக்காட்சியில் முக்கிய நேரங்களில் தடை விதித்திருப்பதாக செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.