திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை: ஆந்திர அரசு
ஆந்திரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 26,000 திருநங்கைளைக் கொண்டுள்ள அந்த மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித் தொகைக்கு திருநங்கைகள் இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர உதவித் தொகை மட்டுமன்றி, திருநங்கைகள் தங்கள் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக் கொள்பவற்கான பணித் திறன் மேம்பாடு, நியாயவிலைப் பொருள் வாங்குவதற்கான குடும்ப அட்டைகள், வீட்டு மனைகள், கல்வி உதவித் தொகைகள் ஆகியவற்றையும் புதிய திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, திருநங்கைகள் சிறுதொழில் தொடங்குவதற்காக வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்களிலும், வணிக வளாகங்களிலும் திருநங்கைகளுக்கான பிரத்யேக கழிப்பறைகள் அமைப்பது, சலுகைக் கட்டணத்துடன் கூடிய பேருந்து பயண அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் மாநில அரசின் புதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.