பஞ்சாபின் அமிருதசரஸ், ஜலந்தர், பாட்டியாலா மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபின் அமிருதசரஸ், ஜலந்தர், பாட்டியாலா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும், 29 நகராட்சிகள் மற்றும் நகர்ப்புறபஞ்சாயத்துகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
பாட்டியாலாவில் அதிகபட்சமாக 62.22 சதவீத வாக்குகள் பதிவாயின. அதைத் தொடர்ந்து ஜலந்தரில் 57.2, அமிருதசரஸில் 51 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு மாலையில் முடிவடைந்ததும், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதன்படி, பாட்டியாலா மாநகராட்சியில் மொத்தமுள்ள 58 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. ஜலந்தரில் உள்ள 66 வார்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. எதிர்க்கட்சியான பாஜக 8 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அமிருதசரஸில் காங்கிரஸ் 69 இடங்களைப் பிடித்தது. சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணிக்கு 12 இடங்களே கிடைத்தன.
முதல்வர் கருத்து: தேர்தல் வெற்றி குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், "எதிர்க்கட்சியினரின் நெருக்கடி கொடுக்கும் தந்திரத்துக்கு அடிபணியாமல் இருந்ததற்காக வாக்காளர்களை வாழ்த்துகிறேன். மாநிலத்தில் 10 ஆண்டுகளாக அகாலிதளம் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தனர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தலிலும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர். இத்தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் சரியானவை என்பதை நிரூபித்துள்ளன' என்றார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: அதேவேளையில், நகராட்சித் தேர்தலில் மிகப்பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு தங்களிடம் விடியோ ஆதாரம் உள்ளதாகவும் அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் தொண்டர்கள் மீது காவல்துறை அடக்குமுறைகளை ஏவிவிட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தைப் படுகொலை செய்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக சிரோமணி அகாலிதளம்-பாஜக பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அமிருதசரஸில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.