இந்தியா, சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநில எல்லையான டோக்லாம் பகுதியில் சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடியது.
இதனால், அப்பகுதியில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டுப் படைகளை நிலை நிறுத்தியது. இந்த விவகாரத்தால் இருநாடுகளிடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்தது.
இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.
இந்நிலையில், இருநாடுகளின் எல்லை குறித்து விவாதிக்க 20-ஆவது வருடாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் குழுவினருடன் சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினரும், மாநில ஆலோசகருமான யாங் ஜேய்சிய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, 2016-ம் ஆண்டு பெய்ஜிங்கில் கடந்த முறைக்கான வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. கடந்த 1962-ம் ஆண்டு முதல் இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.