புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விரிவான தீர்ப்பு கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 18 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதன்மூலம் சுமார் 7 ஆண்டு காலம் நடைபெற்று வந்த இவ்வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
தீர்ப்பு தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள், 'விரிவான தீர்ப்புகாக நாங்கள் காத்திருக்கிறோம். கிடைத்தவுடன் அதுகுறித்து ஆலோசித்து, சட்டப்பூர்வமாக அடுதது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார்.
இதேபோல அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறும் பொழுது, 'உயர் அதிகாரிகளுடன் முறையாக ஆலோசித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.