காந்தி நகர்: குஜராத்தின் புதிய முதல்வராக பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 99 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே முதல்வராக இருந்த விஜய் ரூபானியே மீண்டும் முதல்வர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும், கடந்த தேர்தலை விட இம்முறை குறைந்த இடங்கள் வித்தியாசத்திலேயே பாஜக வெற்றி கண்டிருப்பதால், அவர் முதல்வராக தொடருவார என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை காந்தி நகரில் நடைபெற்றது. மேலிடப் பார்வையாளர்களான மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பொதுச் செயலர் சரோஜ் பாண்டே ஆகியோர் புதிய எம்எல்ஏக்களுடன் ஆலோசித்தனர்.
பின்னர் குஜராத்தின் புதிய முதல்வராக தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணை முதல்வராக நிதின்பாய் படேல் தேர்வு செய்யப்பட்டுளளார்.