இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான ரமா தேவி என்னும் பெண் ஆணைப் போல் வேடமணிந்து கடந்த 2 ஆண்டில் 3 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி உள்ள சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு அருகே உள்ள கிரமத்தில் பிறந்த ரமா தேவி சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆண்களைப் போல் முடியை வெட்டிக் கொண்டு பேண்ட், சர்ட்டுடன் வலம் வந்த இவர் முதலில் அனந்தபுரம் மாவட்டம் கொத்தச்செருவு கிராமத்தைச் சேர்ந்த 18-வயது பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். பின்னர் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்த வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
இறுதியாக ஜம்மலமடுகு பகுதி பீமகுண்டத்தைச் சேர்ந்த 18-வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். எப்போதும் திருமணம் முடிந்தவுடன் தனக்கு அவசர வேலை ஒன்று வந்திருப்பதாகவும், சென்று சென்னையில் ஒரு வீடு பார்த்துவிட்டு அழைத்துச் செல்வதாகவும் கூறி செல்லும் ரமா தேவி, திரும்பி வருவதே கிடையாது.
தனது கணவனுக்கு என்னவானது என்று விசாரித்த போது தான் தாங்கள் திருமணம் செய்தது ஒரு ஆணே கிடையாது என்கிற அதிர்ச்சி தகவல் இவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜம்மலமடுகு பகுதியைச் சேர்ந்த ரமா தேவியின் 3-வது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கடப்பா மாவட்ட ஆந்திரா காவலர்கள் ரமா தேவியை சென்னையில் கைது செய்துள்ளனர்.