ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையினை கிண்டல் செய்யும் விதமாக, இனி பேஸ்புக்கில் சங்கேத மொழியில்தான் பதிவிடப் போவதாக அம்மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்களின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து அம்மாநில அரசு செவ்வாயன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளின் மூலம், எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது.
அதேபோல அரசியல் கட்சித் தலைவர்கள் யாருடைய சமூக வலைதள பதிவுகளை ஆதரிக்கும் விதமாக பதிவிடக் கூடாது.
அதே போல அவர்களின் சமூக வலைதள நடவடிக்கைகளை அரசு ஆதரிப்பதாகவோ, அனுமதி அனுமதி அளிப்பதாகவோ தோற்றம் தரும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமையக் கூடாது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஷா பிசெல்.சமூக வலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு முறையாவது பேஸ்புக்கில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
இந்நிலையில் அரசின் அறிவிப்பானது வெளியானவுடன், அதனைக் கிண்டல் செய்யும் விதமாக ஷா பிசெல் ஒரு பதிவினை இட்டார். அதில் அவர் கூறியதாவது:
"இன்றில் இருந்து நான் பேஸ்புக்கில் சங்கேத மொழியில்தான் பதிவிடப் போகிறேன்.பேஸ்புக் பயன்படுத்தினால் அரசு ஊழியர்களுக்கு காலில் அடி விழும் (கிண்டல் பொருளில்) என்று கேள்விப் பட்டேன்"
அவரது இந்த பதிவிற்கு பேஸ்புக்கில் அவரைப் பின்தொடரும் இந்நாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை அனைவரிடம் இருந்தும் பல நகைச்சுவையான பதில்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.