வரும் ஜனவரி 10-ந் தேதி இந்தியாவின் கார்டோசாட் 2ஏ செயற்கைக்கோளுடன், அமெரிக்கா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்த செயற்கைக்கோள்கள், ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்தியா சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு 8-ஆவது முறையாக இந்த கார்டோசாட் தொலையுணர்வு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டவுள்ளது. இதன் முக்கியப் பணி பூமியை படமெடுத்து அனுப்புதல், கடற்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதாகும்.
மேலும், இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியா விண்ணில் செலுத்தியுள்ள செயற்கை கோள்களின் கார்டோசாட் 2 பல விஷயங்களில் வித்தியாசமானது. இதன் 2 கேமராக்கள் 2 மீட்டர் விட்டத்தில் இருக்கும் எந்தவொரு பொருளையும் துல்லியமாக படம் எடுக்கும்.
இதுகுறித்து இஸ்ரோ இயக்குநர் தேவி பிரசாத் கார்னிக், சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஜனவரி 10-ந் தேதி காலை சரியாக 9.30 மணியளவில் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2ஏ செயற்கைக்கோளுடன், அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படும் என்றார்.