புதுதில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவரையும் விடுவித்து தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த தயாநிதிமாறன் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது அவர் தொலைத்தொடர்பு துறையில் அலைக்கற்றை உரிமம் பெற விண்ணப்பித்திருந்த எக்ஸெல் நிறுவனத்தை கட்டாயப்ப்டுத்தி, அதன் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாகவும், அதற்கு பதிலாக மேக்சிஸ் நிறுவனம், தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் ரூ.600 கோடிக்கும் மேல் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இவர்கள் இருவரின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகிய மூவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி,ஷைனி உத்தரவிட்டார்.
மேலும் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கையும் அவர் தள்ளுபடி செய்தார்.