புதுதில்லி: பஞ்சாப் மற்றும் கோவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஓட்டுப்பதிவில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் தேர்தல் ஆணையமானது முதுகெலும்பு இல்லாமல் மோடியிடம் சரணடைந்து விட்டது என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் 117 சட்டசபை தொகுதிகளுக்கும், கோவாவிலிருக்கும் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த ஓட்டுப்பதிவில் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு மாறாக கட்சி சின்னங்கள் மற்றும் இதர பிரச்சார பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு வருதல், வாக்குப்பதிவு நாளன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தல் ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு எதிர்வினையாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
ஆர்.பி.ஐ மற்றும் சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை போன்று தேர்தல் ஆணையமும் மோடியிடம் முழுமையாக சரணடைந்து விட்டது. இந்த தேர்தலை ஆணையமானது வெட்கமற்ற , முதுகெலும்பற்ற அமைப்பாக இருக்கின்றது.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.