திருப்பதி: திருப்பதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் காணிக்கையாக அளித்தார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க கோரி நடந்த போராட்டங்களுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திர சேகர ராவ் தலைமை தாங்கினார். பெரும் போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்தது. கே.சி.சந்திரசேகர ராவ் மாநிலத்தின் முதல் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் தனிமாநில கோரிக்கை நிறைவேறினால் திருப்பதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு தங்க நகைகளை காணிக்கையாக செலுத்துவதாக சந்திர சேகர ராவ் வேண்டுதல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கழித்து வேண்டுதலை நிறைவேற்ற இன்று திருக்கோயிலுக்கு வந்த தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ், ரூ.ஐந்து கோடி மதிப்புள்ள 18.85 கிலோ தங்க நகைகளை பெருமாளுக்கு காணிக்கையாக அளித்தார்.
தரிசனம் மற்றும் பூஜைகள் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இரண்டு தெலுங்கு மாநிலங்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்' என்று தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து திருச்சானூர் பத்மாவதி கோயிலுக்கு சென்ற அவர் அங்கிருந்த தாயாருக்கு ரூ.45000 மதிப்புள்ள தங்க மூக்குத்தியை காணிக்கையாக வழங்கினார்.