தொலைதொடர்புத் துறையில் அனைத்து கட்டங்களிலும் ஆற்றல், பொறுப்புணர்வு ஆகியவற்றை விரைந்து கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தொலைதொடர்புத் துறைச் செயலர், அதிகாரிகளுடன் புதன்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, தொலைதொடர்புத் துறைக்கு வந்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொலைதொடர்புத் துறையில் மோசமான சேவை, தொடர்பு துண்டிப்புப் பிரச்னை, தரைவழி தொடர்பில் கோளாறு போன்றவை தொடர்பாக பெரும்பாலான புகார்கள் வருகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அப்போது, இந்தத் துறையின் அனைத்து கட்டங்களிலும் ஆற்றல், பொறுப்புணர்வு ஆகியவற்றை கூடிய விரைவில் கொண்டுவர வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.