உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, 70 வயதைக் கடந்த முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 லட்சம் வரை செலுத்தப்பட்டிருந்தால், அவர்களிடம் வருமான வரித் துறை எவ்வித ஆதாரங்களையும் கேட்காது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பற்றிய விவரங்களை வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்தக் காலகட்டத்தில், 70 வயதுக்கும் கீழானவர்கள், தங்களது வங்கிக் கணக்குகளில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தியிருந்தால், அவர்கள், வருமான வரித் துறையின் இணையதளத்தில், தங்களுடைய வருமானத்துக்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகை, முந்தைய ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்குடன் ஒத்துப்போகும் அளவுக்கு இருந்தால், அந்த நிலையிலேயே விவரங்கள் சரிபார்ப்புப் பணி முடித்துக் கொள்ளப்படும்.
ஆனால், வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் ரொக்கப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அந்தத் தொகைக் கிடைத்ததற்கான ஆதாரங்கள் கேட்கப்படும்.
70 வயதுக்கும் கீழானவர்கள் ரூ.2.5 லட்சம் வரை செலுத்தியிருந்தாலும், 70 வயதைக் கடந்தவர்கள் ரூ.5 லட்சம் வரை செலுத்தியிருந்தாலும், அந்தத் தொகை, அவர்களது கடந்த கால சேமிப்புத் தொகை அல்லது கடந்த கால வருமானமாகக் கருதப்படும். எனவே, அவர்களிடம் எந்த ஆதாரமும் கேட்கப்படாது.
சந்தேகத்துக்கிடமான வகையில் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டு, மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் அந்த மூத்த அதிகாரி.