கருப்புப் பணத்தை மாற்றும் பொருட்டு அதிக அளவில் ரொக்கப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்ததற்குப் பிறகு பல்வேறு வங்கிக் கணக்குககளில் சந்தேகத்துக்குரிய வகையில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. மேலும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ரொக்கப் பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
பணப் பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், அவற்றையும் மீறி நூதன முறைகளில் கருப்புப் பணம் மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.5 லட்சத்துக்கும் அதிமாக டெபாசிட் செய்தவர்களது பரிவர்த்தனைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வருமான வரித் தாக்கலின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ள லட்சக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தச் சூழலில், ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதற்குப் பிறகு வர்த்தக நடவடிக்கைகளில் ரொக்கப் பரிவர்த்தனையை அதிக அளவில் கையாண்டிருக்கும் நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
கருப்புப் பணத்தை மாற்றுவதற்காக சில வர்த்தக நிறுவனங்கள், தங்களது பொருள்களையோ, சேவைகளையோ விற்பனை செய்யும்போது வேண்டுமென்றே ரொக்கப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டன. அத்தகைய நிறுவனங்களின் நிதி சார்ந்த செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்நிறுவனங்களின் சரக்கு இருப்பு விவரம் மற்றும் விற்பனை தகவல்களை வரித் துறை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.
இவற்றைத் தவிர, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மாதாந்திர விற்பனை நிலவரம், ரொக்கப் பரிவர்த்தனை அளவு, வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.