சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஹிந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சுட்டுரையில் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குஜராத் அரசிடம் அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீஸ்தா சீதல்வாட் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி என்.வி.அஞ்சாரியா விசாரித்தார். அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மிதேஷ் அமீனிடம் சில கேள்விகளை நீதிபதி முன்வைத்தார்.
அதாவது, தீஸ்தாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் விசாரணையை முடித்துவிட்டனரா? அவ்வாறு முடித்திருந்தால் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தயாரா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, "அந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணையை முடித்து விட்டனர். அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயார்' என்று மிதேஷ் அமீன் பதிலளித்தார்.
இதையடுத்து, அடுத்த மாதம் 1-ஆம் தேதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில், ஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைகளில் ஹிந்து கடவுள்களின் உருவம் இருப்பது போல் மாற்றி அந்த புகைப்படங்களை சுட்டுரையில் தீஸ்தா பதிவேற்றம் செய்தார்.
பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் புகைப்படங்களை அவர் நீக்கிவிட்டார். எனினும், விசுவ ஹிந்து பரிஷத் பிரமுகர் ராஜு படேல் அளித்த புகாரின் பேரில் அவருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.