புதுதில்லி: சமாஜவாதி கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலைத் தொடர்ந்து கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக முலாயம் சிங் யாதவ் புது தில்லிக்கு விரைகிறார்.
சமாஜவாதி கட்சியில் தலைவர் பதவியிலிருந்து முலாயம் சிங்கை நீக்குவதாக நேற்று அவரது மகனும், மாநில முதல்வருமான அகிலேஷின் ஆதரவாளர்கள் கூட்டிய பொதுக்குழு அறிவித்தது. இதனால் கட்சி இரண்டாக உடைந்தது. குழப்பத்திற்கு காரணமான ராம் கோபால் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்த முலாயம்,கட்சியின் தேசிய குழுவின் அவசர கூட்டமானது ஜனவரி 5 - ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது ஆலோசனையின் படி, ஜனவரி 5-ஆம் தேதி நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யபடுவதாக கட்சியின் மாநிலத் தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் டிவிட்டரில் அறிவித்தார்.
அத்துடன் தற்போது புதிய பிரிவாக உருவாகியுள்ள அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் கட்சியின் சைக்கிள் சின்னைத்தை கைப்பற்றுவதற்கு முன்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு முலாயம் சிங் புதுதில்லிக்கு விரைகிறார். அவருடன் ஷிவ்பால் சிங் யாதவ் மற்றும் தனது லண்டன் பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு திரும்பிய, கட்சியின் மாநிலங்களவை எம்.பி.அமர் சிங் ஆகிய இருவரும் இணைந்து கொள்கின்றனர்.