புதுதில்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவித்துள்ளார்.
தில்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஐந்து மாநில தேர்தல் அட்டவணையை வெளியிடுவது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தல் அட்டவணை விபரம் வருமாறு:
உத்தர பிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் - பிப்ரவரி 11 ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் - பிப்ரவரி 15 ஆம் தேதியும், மூன்றாவது கட்டம் - பிப்ரவரி 19 ஆம் தேதியும், நான்காவது கட்டம் - பிப்ரவரி 23 ஆம் தேதியும், ஐந்தாவது கட்டம் - பிப்ரவரி 27 ஆம் தேதியும், ஆறாவது கட்டம் - மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறுகிறது. அதே போல் உத்தரகாண்ட் மணிகலத்தில் ஒரே கட்டமாக பிபர்வரி 15ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்த வரை இரண்டு கட்டங்களாக மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தேர்தல்நடைபெற உள்ளது.
அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கையிலானது மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கபப்டும்.
ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 690 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 18 கோடி மக்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த உள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 1.85 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்த ஐந்து மாநிலங்களிலும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.