பெங்களூர்: ஐடி துறையில் முன்னிலையில் இருக்கும் பெங்களூர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருவதை இன்று ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் விடியோ நிரூபித்துள்ளது.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது பெங்களுரின் முக்கியப் பகுதியான எம்ஜி சாலையில், பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின.
மேலும், பெங்களுர் குடியிருப்புப் பகுதியில் பெண் ஒருவரை, இரண்டு ஆண்கள் வன்முறைக்கு உட்படுத்தும் விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், குடியிருப்புப் பகுதி ஒன்றில், ஜனவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை, சாலையில் நின்றிருந்த இரண்டு ஆண்கள் வன்முறைக்கு உட்படுத்தும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த விடியோ உண்மையானதா என்றும், இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் இதுவரை தகவல் எதுவும் இல்லை.
யாருமற்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறும் என்ற நிலை மாறி, குற்றங்கள் நடைபெறும் இடத்தில் யாரும் தட்டிக் கேட்காமல், அங்கிருந்து நகர்ந்து செல்லும் நிலைதான் உள்ளது என்பதை இந்த விடியோ காட்டுகிறது.