புது தில்லி: உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு விவகாரத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான வன்முறைச் சம்பவங்களும் ஹவாலா மோசடி நடவடிக்கைகளும் குறைந்துள்ளன.
மத்திய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட விவகாரம் ஹவாலா மோசடியாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களது மோசடி 50 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாகிஸ்தானில் அச்சடித்து, பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட 500 மற்றும் 1000 கள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விட முடியாமல், பயங்கரவாதம் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்துக்கும் மேலாக காஷ்மீரில் நடந்து வந்த கல்வீச்சு சம்பவம், நவம்பர் 9ம் தேதிக்குப் பிறகு முற்றிலும் நின்று போனதே இதற்கு உதாரணம்.