புதுதில்லி: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட்வீரர் சித்து இன்று தில்லியில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி சார்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்த்சர் தொகுதி எம்பியாக 10 வருடங்கள் பணியாற்றியவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பின்னர் கடந்த வருடம் அக்கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரும் அவரது மனைவி நவஜோத் கவுரும் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர் மனைவி மட்டும் சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பின்னர் முன்னாள் ஹாக்கி வீரர் பர்கத் சிங், பஞ்சாபி எம்.எல்.ஏக்கள் சிம்ரஜித் சிங் பெய்ன்ஸ் மற்றும் பல்வந்த்சிங் பெய்ன்ஸ் ஆகியோருடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஒன்றை சித்து உருவாக்கினார் ஆனால் தற்போது காங்கிரசில் இணையும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
வரும் ஜனவரி 10-ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலத்திற்கான காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில் மீதம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த சூழலில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இணைப்புக்குப் பிறகு அமிர்த்சர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சித்து போட்டியிடலாம் என்று அவரது மனைவி கவுர் தெரிவித்துள்ளார்.