சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பொன்னம்பல மேட்டில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் தெரிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை கண்டு தரிசித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சார்த்த வேண்டிய திரு ஆபரணப்பெட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணி அளவில் சரம் குத்தி வந்தடைந்தது. அங்கிருந்து சபரிமலை செயல் அதிகாரி, நிர்வாக அதிகாரிகள் தலைமையில் திருவாபரண பெட்டி பெறப்பட்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக சுவாமி சன்னிதானதிற்கு எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் 18-ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதே சமயத்தில் மாலை 6.45 மணி அளவில் 3 முறை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி காட்சியளித்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் 'சுவாமியே சரணம் அய்யப்பா' என்று கோஷமிட்டனர். இவர்களின் சரண கோஷமானது விண்ணை பிளந்தது.
மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மகர ஜோதி தரிசனத்திற்காக பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டிருந்தனர்.