இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரகாஷ் சரண் மஹத், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பிரகாஷ் சரண் மஹத் 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார்.
தில்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வி.கே.சிங் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்போன்போது உடனிருந்த நேபாளத் தூதர் தீப குமார் உபாத்யாய் கடந்த வாரம் கூறுகையில், "இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நேபாள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கும் நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான புகாரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, நேபாளத்தில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.