பெங்களூரு: பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 19 வங்கிகள் சேர்ந்த கூட்டமைப்பிடம் வாங்கிய ரூ.6203 கோடி கடனுக்காக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இவர் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 19 வங்கிகளிடம் வியாபார முன்னேற்றத்துக்காக ரூ.6203 கோடி கடன் பெற்றிருந்தார். அனால் அந்த கடன் தொகையை முறையாக திரும்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.
எனவே மல்லையா தங்களிடம் பெற்ற ரூ.6203 கோடி கடனை திருப்பி செலுத்த வழி செய்யுமாறு 19 வங்கிகளின் கூட்டமைப்பானது கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது.
இந்நிலையில் இன்று கடன் வசூல் தீர்ப்பாயத்தின் பெங்களூரு பிரிவானது வெளியிட்டுள்ள உத்தரவில் விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் நிறுவனத்தின் ரூ.6203 கோடி மதிப்புடைய சொத்துக்களனைத்தையும் கையகப்படுத்தி, கடன் வசூல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வங்கிகள் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.