புது தில்லி: ஜல்லிக்கட்டுத் தொடர்பான பிரச்னை நாளை காலைக்குள் முடிவுக்கு வரும் என்றும், தமிழர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே கூறினார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம்.
தமிழக பாரம்பரியத்தைக் காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்ட வரைவு நகல் உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளது. அவசரச் சட்ட வரைவு நகலை உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். எனவே, இன்று அல்லது நாளை ஜல்லிக்கட்டு பிரச்னை முடிவுக்கு வரும்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பான பிரச்னைகள் நாளை காலைக்குள் முடிவுக்கு வரும். தமிழர்களின் போராட்டம் பிரம்மிக்க வைக்கிறது என்று தெரிவித்தார்.