பிகாரில் ஆள்கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) எம்.பி. உள்பட 7 பேர், போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டில் ஒரு பள்ளிச் சிறுவனை கடத்தி, அவனது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக லோக்ஜன சக்தி கட்சி எம்.பி. ராம் கிஷோர் சிங் உள்பட 7 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வைஷாலி மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், ராம் கிஷோர் உள்ளிட்டோரை அடையாளம் காட்டுவதற்கு சாட்சிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ராம் கிஷோர் உள்ளிட்டோரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.