புது தில்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து 5வது நாளாக தமிழர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் சற்றும் தளர்வில்லாமல் நடந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 200 பேருடன் தொடங்கிய இப்போராட்டம் இப்போது லட்சங்களைத் தாண்டியுள்ளது. அவசரச் சட்டம் இயற்றி ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
வாடிவாசலில் காளைகள் துள்ளிக்குதித்து ஓடும் வரை போராட்டம் முடிவுக்கு வராது என்றும், அவசரச் சட்டம் மட்டுமே தீர்வல்ல.. நிரந்தரத் தீர்வே எங்களது கோரிக்கை என்று சற்றும் சளைக்காமல் சொல்கிறார்கள் தமிழர்கள்.
இந்த நிலையில், தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தில்லியில் தமிழ் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல, மும்பையில் ஏராளமான இளைஞர்கள் மனித சங்கிலிப் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.