புது தில்லி: தமிழக கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இவ்வளவுப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தும், சிறு வன்முறை கூட ஏற்படவில்லை. ரயில் மறியலின் போது பாதிக்கப்பட்டும் ரயில் பயணிகளுக்குக் கூட, போராட்டக்காரர்கள் உணவுகள் வழங்கி பாதுகாப்பது போராட்டத்துக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.
இது குறித்து பிரதமர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, தமிழக கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
தமிழக கலாசார விருப்பங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. புதிய உச்சங்களை தமிழகம் அடைய மாநில அரசுடன் தொடர்ந்து இணைந்து பாடுபடுவோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.