தென்னிந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் சிலரைக் கொல்வற்கு சதித் திட்டம் தீட்டியவரை சவூதி அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. அவரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சையது ஜாகீர் ரஹீம் என்ற அந்த நபரை சவூதியில் அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்தது. இந்நிலையில், அவரை சவூதியில் இருந்து தில்லிக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது. தில்லியில் அவரைக் கைது செய்த தேசியப் புலனாய்வு அமைப்பினர், வெள்ளிக்கிழமை ஹைதராபாதுக்கு அழைத்து வந்தனர்.
கைதான சையது ஜாகீர் ரஹீம் மீது பாஜக தலைவர்களைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரஹீமின் மைத்துனரான ஃபர்ஹத்துல்லா கோரி, தேடப்படும் பயங்கரவாதி ஆவார்.
பெங்களூரு மற்றும் ஹூப்ளியில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்களைக் கொல்வதற்கு குறிவைத்த லஷ்கர்-ஏ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த ஃபர்ஹத்துல்லா கோரி, தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.