"ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் மட்டும் போதாது; நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்' என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் அன்புமணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சனிக்கிழமை சந்தித்தனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நீடித்து வரும் சூழ்நிலை குறித்து அவர்கள் குடியரசுத் தலைவரிடம் பேசினர். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு சற்று தாமதமாக அவசரச் சட்டம் கொண்டு வந்திருந்தாலும் அதை பாமக வரவேற்கிறது. அதே சமயம், உச்ச நீதிமன்றத்தில் அவசரச் சட்டத்தை எதிர்த்து யாராவது முறையிட்டால் அதை ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலில் காளையை நீக்குவதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கையை மத்திய அரசுதான் அதற்குரிய அதிகாரம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவை உள்ளது. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது குடியரசுத் தலைவரும் ஆட்சியாளர்களும்தான்.
லட்சக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட அழுத்தம் காரணமாகத்தான் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் சாத்தியமாகியுள்ளது. அது தொடர வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த முயற்சி ஈடேற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.