மும்பை: நாட்டின் புகழ்பெற்ற பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் மாயமான சம்பவம் அங்கே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
நவி மும்பை பகுதியின் அருகே அமைந்துள்ளது நெருல் பகுதி. இங்கே வசித்து வருபவர் பபிதா சிங் (30) . இவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரை கடந்த 23-ஆம் தேதி திங்கள்கிழமையில் இருந்து காணவில்லை. அன்று மதியம் 1 மணி அளவில் அலுவலகம் சென்றவர் அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை.
அவர் அன்றிரவு வீடு திரும்பாததால் அவரதுஉறவினர் போலீசில் புகார் செய்துள்ளார். பபிதா காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அவரது பெற்றோருக்கு தன்னுடைய பணியிடத்தில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மின்னஞ்சல் செய்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்று தெரிவிக்காத அதிகாரி, சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பபிதாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.