ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பனியினால் பாதையில் 'திடீர்' பள்ளம் உண்டானதால் ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு:
காஷ்மீரின் வடக்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ளது குப்வாரா மாவட்டம். இங்கே 56-வது ராஷ்டிரிய ரைபிள் படைப் பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை அவர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, அவர்களின் பாதையில் பனியின் காரணமாக 'திடீர்' பள்ளம் உண்டானது. அவர்கள் அதில் சிக்கி கொண்டனர், தற்பொழுது பனி மூடியுள்ள அந்தப் பள்ளத்திலிருந்து அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீரில் தற்போது கடுமையான பனி பொழிந்து வருவதும், அடிக்கடி பனிப்புயல் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.