கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் துவங்கவுள்ள “கன்வாரியா யாத்ரா” என்ற புனித யாத்திரையின் பொழுது, சினிமாப் பாடல்களை ஒலிப்பதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் சிவ பக்தர்கள் விரதம் இருந்து காலையில் கங்கையில் இருந்து நீர் எடுத்துச் சென்று, நடைபயணமாக சிவன் கோவில்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதற்கு “கன்வாரியா யாத்ரா” என்று பெயர். இந்த புனித யாத்திரை அநேக வடமாநிலங்களில் நடைபெறுகிறது.
இம்முறை இந்த யாத்திரையை ஆம்மாநில முதல்வரான ஆதித்யநாத்தும் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் அரசு நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்று உள்ளது.
இந்த ஆலோசனையின் பொழுது யாத்திரை செல்லும் போது சினிமா பாடல்கள் மற்றும் ஆபாச பாடல்கள் ஒலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இத்தகைய ஆன்மீக யாத்திரைகளில் பஜனை பாடல்கள் மட்டுமே கேட்கவேண்டும், அதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.
அவரது இந்த உத்தரவு குறித்து அங்கே தற்பொழுது வேறுபட்ட கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன.