புது தில்லி: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சார்பில் அவரது வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் இன்று கோரிக்கையை முன்வைத்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்த மனுவை பதிவு செய்ய அனுமதித்து, அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரினார்.
ஆனால், வழக்குரைஞரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்ணன் தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க முடியாது. அவர் சார்பில் தொடரப்படும் எந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும். இது தொடர்பாக எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் மனுக்களைக் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
பொதுவாக நீதிமன்ற பதிவாளர் மனுவை பதிவு செய்ய எடுத்துக் கொண்டால் தான் அது விசாரணைக்கு வரும். எனவே, கர்ணன் தொடர்பான மனுவை பதிவு செய்யவே அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், வேறு எந்த நீதிமன்றத்தையும் நாடவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
5 முறைக்கும் மேலாக ஓய்வு பெற்ற கர்ணன் தொடர்பான ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.