செஹோர் (மத்திய பிரதேசம்): ஏழை குடும்பத்திலிருந்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கான அரசின் நிதியுதவி கிடைக்காததால், பூங்கா ஒன்றில் அம்பத்கர் சிலை முன்பு ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் கல்லு ஜாதவ் மற்றும் வைஜயந்தி ரஜோரி. தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த, மிகுந்த ஏழ்மை நிலைமையில் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்தார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ள , "பொருளாதார நிலையில் நலிவடைந்த பெண்களுக்கான திருமண நிதியுதவி' திட்டத்தின் கீழ் நிதி பெற வைஜயந்தி குடும்பத்தினர் விண்ணப்பித்தும் நிதி கிடைக்கவில்லை
எனவே என்ன செய்வது என்று தடுமாறிய இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எதுய்த்தனர். அதன்படி கடந்த 3-ஆம் தேதியன்று, செஹோர் நகரத்தில் உள்ள பூங்காவிற்கு வந்தனர்.அங்கே வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு முன்பாக நின்றவர்கள், தங்கள் திருமணத்தில் வழக்கமாக செய்ய வேண்டிய சடங்கான 'ஏழு முறை சுற்றுதல்' சடங்கினை அம்பேத்கர் சிலையினை சுற்றி வந்துநிறைவேற்றினர்.
அத்துடன் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த புத்தரின் படத்திற்கு அருகே அவர்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
இதன் மூலம் வழக்கமான திருமண சடங்குகளில் உண்டாகும் அதிகப்படியான செலவுக்கு எதிராக, தாங்கள் ஒரு செய்தியை பரப்ப விரும்புவதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.