புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. எனினும், ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இதுவரை தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, அந்த பதவிக்கு தகுதியுள்ள ஒரு நபரை தேர்வு செய்யும் முக்கியப் பணியில் பாஜக இறங்கியுள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களே தற்போது குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்து வருவதால், அடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், தேசிய ஜனநயாகக் கூட்டணி வேட்பாளருக்கு 70 சதவீத வாக்குள் கிடைக்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோடு சேர்த்து மொத்தம் 550 பேரின் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளருக்கான நபரை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.