இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் குறித்து 3 நாள்களுக்குள் வங்கிகளில் தகவல் தெரிவிக்காவிட்டால், வாடிக்கையாளர் இழப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தங்களது வங்கிக் கணக்கிலிருந்து மூன்றாவதாக ஒரு நபர் இணையம் மூலம் முறைகேடாக பணம் எடுத்தால், வாடிக்கையாளர்கள் அதுகுறித்து 3 நாள்களுக்குள் வங்கிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தெரிவித்தால், குறிப்பிட்ட அந்தத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் 10 நாள்களுக்குள் வரவு வைக்கப்படும்.
அதற்குப் பதிலாக, நான்கு நாள்கள் முதல் 7 வேலை நாள்களுக்குள் மோசடியாக எடுக்கப்பட்ட பணம் குறித்து தகவல்கள் தரும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட தொகையில் ரூ.25,000 வரை பொறுப்பேற்க வேண்டும்.
வாடிக்கையாளர் தனது அலட்சியத்தால் வங்கிக் கணக்கு மற்றும் பணம் எடுப்பதற்கான விவரங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பண மோசடி நடைபெற்றிருந்தால், அந்த இழப்பு முழுவதையும் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.
மோசடி குறித்து உரிய நேரத்தில் வங்கிகளுக்குத் தெரியப்படுத்திய பிறகும், அந்தத் தொகையை மீட்க முடியாமல் போனால் அந்த இழப்பு முழுவதையும் வங்கிகள் ஏற்கும். வாடிக்கையாளர் மீதோ, வங்கியின் மீதோ தவறில்லாமல், பணப் பரிவர்த்தனை முறையில் தவறு இருந்து அதன் காரணமாக இணையதள பண மோசடி நடைபெற்றிருந்தால், அந்த இழப்பை இரு தரப்பினரும் ஏற்கத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.