முதல் உலகப் போரின்போது இஸ்ரேலின் ஹைஃபா நகரை விடுவிப்பதற்காகப் போராடி வீர மரணமடைந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
முதல் உலகப் போர் நடைபெற்றபோது துருக்கியின் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் போரிட்டு ஹைஃபா நகரை மீட்டனர். அவர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் 44 வீரர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஓர் நினைவிடத்தை இஸ்ரேல் அமைத்துள்ளது. அந்த இடத்தில் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை பெருமையாக உணர்கிறேன் என்று கூறினார்.
முதல் உலகப் போரின்போது நேசநாடுகள் சார்பில் இந்தியா போரிட்டது.
1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி கேப்டன் அமன் சிங் பகதூர், அனூப் சிங், ஜோர் சிங், சகத் சிங், மேஜர் தல்பத் சிங் ஆகியோர் தலைமையிலான இந்திய வீரர்கள் ஒட்டோமான் பேரரசின் படைகளுடன் போரிட்டு அந்த ஹைஃபா நகரை மீட்டனர். ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் தேதி ஹைஃபா தினமாக இந்திய ராணுவம் அனுசரித்து வருகிறது. கேப்டன் தல்பத் சிங் 'ஹீரோ ஆஃப் ஹைஃபா' என்றும் அழைக்கப்படுகிறார்.
2012-ஆம் ஆண்டில் ஹைஃபா மாநகராட்சி நிர்வாகம் இந்திய வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் நினைவிடம் அமைத்தது. இஸ்ரேல் பள்ளிப் பாடத்திலும் இந்திய வீரர்கள் ஹைஃபா நகருக்காக போரிட்ட வரலாறு இடம் பெற்றுள்ளது.