கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாங்கிய விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் ரூ.34,022 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஃபட்னவீஸ் அறிவித்தார்.
அதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வாங்கிய விவசாயக் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் அனில் பாந்தே, ஆஷிஷ் தேஷ்முக், சஞ்சய் குடே, பிரசாந்த் பாம்ப் ஆகியோர் ஃபட்னவீஸை மும்பையில் புதன்கிழமை சந்தித்தனர்.
அப்போது, கடந்த 2008-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் பெற்றக் கடனையும் தள்ளுபடி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை முதல்வர் ஃபட்னவீஸ் ஏற்றுக் கொண்டு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அந்த மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முறையாக கடன் தவணையை செலுத்திவந்தபோதிலும் கடந்த (2016-2017)நிதியாண்டில் கடன் தவணையை செலுத்த தவறியவர்களுக்கு அத்தொகையை செலுத்துவதற்கும் கால நீட்டிப்பு செய்து ஃபட்னவீஸ் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதற்காக புதிய குழு ஒன்றை அமைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.