இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி20 12-வது மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, புகைப்படங்களில் இடம்பெறுவதற்காகத்தான் ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டார்.
அங்கு நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பங்கேற்று சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நாகாலந்து தலைவர்களுடன் மோடியால் பேச முடிகிறது என்றால், ஏன் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச முடிவதில்லை.
பாஸ்டரில் பல காலமாக இருக்கும் நக்ஸல் பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முடிவதில்லை. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதை பதிவிடுவதற்காகவே மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்றார் என்று குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, அதிகாரப்பூர்வமற்ற ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நலம் விசாரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பகிரப்பட்டது.