வடகொரியாவின் ஆயுத குவிப்பு நடவடிக்கையால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்: இந்தியா கண்டனம்

வடகொரியாவின் ஆயுத குவிப்பு நடவடிக்கையால், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஆயுத குவிப்பு நடவடிக்கையால், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அணுசக்தி திட்டம், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை திட்டம் ஆகியவற்றை வடகொரியா செயல்படுத்தி வருவதும், அந்நாட்டின் ஆயுத குவிப்பு நடவடிக்கையும், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிடும்படி வடகொரியாவை இந்தியா கேட்டுக் கொள்கிறது. மேலும், இந்தத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து தரப்பினரையும் இதற்கு பொறுப்பாக சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும், அந்நாடுகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், வடகொரியா இந்த வாரத் தொடக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையைப் பரிசோதித்தது. இந்த ஏவுகணையின் தாக்குதல் வட்டத்துக்குள் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் வருகின்றன. இதையடுத்து, வடகொரியாவைக் கண்டிக்கும் வகையில், இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com