மும்பை: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்று ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.
அதாவது, magicapk என்ற இணையதளத்தில், ரிலையன்ஸ் ஜியோ சிம் வைத்திருக்கும் 12 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்களும் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, சிம் கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது
இது குறித்து தனியார் செய்தி இணையதளம் ஒன்று கண்டறிந்து முதன் முதலில் செய்து வெளியிட்டது. அதாவது, magicapk என்ற இணையதளத்தில் ஒரு சில எண்களை பதிவு செய்தாலே, தன்னுடைய மற்றும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்களின் முழு விவரங்களும் இதில் வெளியானதாகவும், ஆனால் ஒரு சில ஊழியர்களின் விவரம் வெளியாகவில்லை என்றும் அந்த தனியார் இணையதள நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது விவரங்கள் வெளியாகாது என்றும் தெரவித்துள்ளது. மேலும், இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் அல்லாமல், ரிலையன்ஸ் ஜியோ, ஆரம்பத்திலேயே சிம் கார்டு பெற ஆதார் எண் அவசியம் என்பதை கட்டாயமாக்கியது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 12 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்று தொலைத் தொடர்புத் துறையில் புதிய புரட்சியைப் படைத்தது.