புதுதில்லி: தில்லியின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மாநில அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லியில் உள்ள வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், தில்லியின் மையத்தில் அமைந்துள்ள ஹவுஜ் காஷ் பகுதியில் வெளிநாட்டவர்கள் அதிகம் கூடுவர். இப்பகுதியை பயங்கரவாதிகள் தாக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிக்கும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், முக்கிய சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.