புத்காம்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புத்காமில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொலை செய்யப்பட்டனர், 15க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்ததையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் புத்காம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் ஜம்மு காஷ்மீர் போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் கூட்டுநடவடிக்கையாக நேற்று மாலை 6 மணியளவில் அங்கு சென்று பயங்கரவாதிகள் தங்கியிருந்த குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர்.
அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைபற்றினர். அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.